பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் இருதரப்பினருக்கிடையே மோதல் உருவானது. பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்ணுராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது 275 வாக்காளர்கள் வாக்களிக்காததால் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுத்தாரரின் வழக்கறிஞர் கோரினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version