தேரடி வீதியில் தேவதையாக அருள்மிகு மீனாட்சி (ம) அருள்மிகு சுந்தரேசுவரரின் திருத்தேரோட்டம்!

பதினோறாம் நாள் நடைபெறும் திருத்தேர் திருவிழா, இறைவனின் சன்காரம் (மறைத்தல்) குறித்து நடைபெறுவதாகும். மேலும் ஆன்மாக்களுக்கு உயர்வு நல்கிவருவதையும் குறிப்பதாகும். தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம். விசுவவிராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிருக்கும் கும்பம் சோடசாந்தம்; அதற்கு அடுத்த கீழடுக்கு துவாதசாந்தம்; அதற்கடுத்து மஸ்தக அதிஸ்தானம்; அதற்கடுத்தது மஸ்தக மத்தியாஸ்தானம்; அதற்கடுத்தது புருவமத்தியஸ்தானம்; நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் தத்துவக்கால்கள்; முன் மூன்று துறைகள் மூன்று கண்கள். பின்னவை, சிகையும் இட வலக்காதுகளாகும்.

இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ்; குதிரைகள் சூரிய, சந்திரகலைகள்; சாரதி அக்னிக்கலை இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம்; அதை அடுத்த அடுக்கு இருதய ஸ்தானம். அதை அடுத்த அடுக்கு நாபி. அதற்கு அடுத்த அடுக்கு குண்டலினி ஸ்தானம்; பத்து சக்கரங்களும் தசவாயுக்கள். இறைவன், இதற்குக்கர்த்தா தான் ஒருவனே, என்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்டத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலினியிலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி இலயப்படுத்தி, முறையே இரதக்குதிரையாய் நாசிக்கும், அங்கிருந்து கண்வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவமத்திக்கும் ஏற்றி, இலயப்பட்டு சும்மா இருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற இலயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன், சிரித்து, எரித்து, ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய ஸ்திதித் தொழிலுக்கும் அறிகுறியாகும்.

இன்று காலை நான்கு மாசிவீதிகளில் வலம் வந்த திருத்தேர் திருக்கோயிலுக்கு 10:30 மணியளவில் வந்து சேர்ந்தது. மதுரையே கோலாகலமாக கொண்டாடித் தீர்த்தது. மக்களை காண மீனாட்சியும் சுந்தரேசுவரரும் வந்துவிட்டனர் என்று மகிழ்ச்சி பெருங்கடலில் மக்கள் ஆழ்ந்திருந்தனர்.

Exit mobile version