மதுரை அரசாளும் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் கோலாகலம்!

இன்று மதுரை சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் ஆகும். இதன் தத்துவமும் பலனும் என்னவென்றால், மக்கள் புணர்வுறு போகம் மூழ்க, இறைவன் புருடனும் பெண்ணுமாகித் திருமணம் கொண்டு ஆற்றுப்படுதலைக் குறிப்பதாகும். இறைவனும் இறைவியும் புரிந்து கொள்ளும் கல்யாணம் திருக்கல்யாணம் எனப்படும். போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தைப் புரிகின்றான். இறைவன் போகவடிவில் வாழாமற் போனால் உலகத்து உயிர்கள் அனைத்தும் போகியாய்  வாழ இயலாது. ஆதலின், இறைவன் திருக்கல்யாணம் புரிவக்து நம் பொருட்டேயாகும். பத்தாம் நாள் இரவு, யானை வாகனத்தின் மீது இறைவன் ஏறி எழுந்தருளுகிறான்.

இது இலயக்கிரம சிருட்டிக் கோலமாகும். இலயக்கிரமம் என்பதற்கு ஒடுங்கும் முறை என்பது பொருள். உலகப்பொருள்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கி, ஒரே பிண்டமான யானையின் உடம்புபோல் பருமனாய்க் கிடந்து ஒடுங்குதலாகும். அதிலிருந்து திரும்பவும் தோன்றுவது, இலயத்தின் பின் சிருட்டி தொடங்குவதைக் குறிக்கும். யானையின் நான்கு பாதங்கள் பிண்டாகர உற்பவம் ஜடத்வம், சுவாச சூக்குமம், வாஜி ஜீவத்வம், பிராணயாமம் இவைகளைக் குறிக்கின்றன. இவை யானையைப் போல ஆத்மஞானத்தில் தோன்றி, துதிக்கையை ஒத்த ஷூம்னையில் நிலைநிற்கும், யானையின் மேல் வைக்கும் அம்பாரி முதலியன வெளித்தோற்ற அண்டகாரமாகும். உற்பவ, சூக்கும, ஜீவ, மாயஞானங்கள் ஆதிம ஞானத்திலும், அவை ஈசுவர சைதன்யத்தும், ஈசுவர சைதன்யம், பிரம சைதன்யத்திலும் இலயிக்கிறது என்பதைக் குறிக்கின்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6.00 மணிக்கு எழுந்தருளினார்கள். கோயிலுக்கு அதிகாலை 4 மணிக்கு அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளாகிய, நான்கு சித்திரை வீதிகள் சுற்றிவந்து பின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின்பு திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி, காலை 8.59 மணிக்குள் மிதுன லக்கணத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று இரவு 7.30 மணியளவில் யானை ஆனந்தராயர் பூப்பல்லக்கு நடைபெறும்.

Exit mobile version