மக்களவை தேர்தல்: இறுதிகட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சேலம் பட்டை கோவில் பகுதியில் சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதலமைச்சர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடை வீதி வழியாக சென்று வாக்கு சேகரித்த அவர், வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கி முதலமைச்சர் ஆதரவு திரட்டினார். அப்போது, கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் நின்று முதலமைச்சர் பழனிசாமி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, கடைவீதியில் இருந்த டீக்கடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தினார். பின்னர், வேட்பாளர் சரவணனை ஆதரித்து பேசிய அவர், இரட்டை இலைக்கு வாக்களித்து அதிமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version