தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: துணை முதல்வர்

சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுகவின் அடிப்படை தேவையே கட்டப் பஞ்சாயத்து தான் என்று குற்றம்சாட்டினார். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழகம் தான் என்று கூறிய அவர், சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 5 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, மின் தட்டுப்பாட்டை நீக்க முடியாத நிலையில் திமுக இருந்தாக குற்றம்சாட்டினார். பல்வேறு சோதனைகளை தாண்டி நீடிக்கும் அதிமுகவை எவராலும் அசைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்று அவர் கூறினார்

 

Exit mobile version