முத்தலாக், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுமா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று உடனடி முத்தலாக் தடை மசோதா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்தநிலையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் இருக்கும் உடனடி முத்தலாக் தடை மசோதா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய முஸ்லீம் அல்லாதோர் குடியுரிமை பெறுவர். இதனால் தங்களின் அடையாளம் அழியும் அபாயம் இருப்பதாக கூறும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பழங்குடியினர், குடிரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version