உஸ்! என்னா வெயிலு! தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்! காரணம் என்ன?

தமிழகத்தில் இரண்டு மாதமாக ஆங்காங்கே மழை பெய்து இருந்தாலும், இந்த ஆண்டு வழக்கத்து மாறாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் துவக்கத்தில் வெயில் சதம் அடித்துள்ளது. வெயில் சதம் அடிப்பதை தொடர்ச்சியாக நம்மால் பார்க்கவும் முடிகிறது. இதைக் குறித்து வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக ஈரப்பதம் உயர்வு காரணமாக ‘ஹீட் ஸ்ட்ரெஸ்’ எனப்படும் வெப்ப அழுத்தம் ஏற்படும் என, வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

தற்போது வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வீசும் மேற்கு திசை காற்று, வெப்பத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த சமயத்தில் தான் கடல் காற்றின் ஆதிக்கம் அதிகரிக்க வேண்டும் அல்லது வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பொழிவு ஏற்பட்டால் வெப்பத்தின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால் இது எதுவும் நடக்காத நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரிக்க்கிறது மற்றும் இது வெப்ப அழுத்த பாதிப்புக்கு வழி வகுத்து கொடுக்கிறது. இந்த சூழலானது படிப்படியாக மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது. வெளியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தான் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள் விரைவில் பாதிப்பினை சந்திக்கிறார்கள்.

முக்கியமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் நேற்றைக்கு எந்த இடத்திலும் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட நிலைதான் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமான வெப்பநிலை நேற்றைக்கு மதுரை விமான நிலையப் பகுதியில் தான் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 41 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது 106 டிகிரி பாரன்ஹீட் ஆகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிமூன்று இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, புதுச்செரி, கடலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி ஆகியவற்றில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமானது பதிவானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இது இயல்பு நிலையில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மன்னார் வளைகுடா, தென் மாவட்டக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல்,மத்திய வங்கக் கடல், இலங்கை கடலோரம், தென்மேற்கு, தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று வீசுகிறது. எனவே அந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version