கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இசைஞானி இளையராஜாவுக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கும் இடையே நடைபெற்ற பாடல்களின் ராயல்டி தொடர்பான பிரச்சனை அவர்கள் இருவரைத் தாண்டியும் அவர்களது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்தது.
இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு “இளையராஜா-75” என்ற நிகழ்ச்சி அவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட இசைத்திருவிழாவில் பல்வேறு இசையமைப்பாளர்கள், நடிகர்கள், பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆனால் எஸ்.பி.பி. இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்ற வருத்தம் அனைத்து தரப்பினருக்கும் இருந்தது.
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற மாட்டார்களா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துவிட்டது.
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் “இசை செலிப்ரேட்ஸ் இசை” என்ற நிகழ்ச்சியில் இளையராஜா முன்னிலையில் எஸ்.பி.பி பாடப்போகிறார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post