கற்பனையாக எதையும் பேசாததால், மன்னிப்புக் கேட்க முடியாது: ரஜினி

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி சென்னையில் துக்ளக் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை மாநாடு குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு நடைபெற்ற மூடநம்பிக்கை மாநாடு குறித்து, ஆதாரமற்ற கருத்துக்கள் எதையும் தான் தெரிவிக்கவில்லை என்றும் இதனால், மன்னிப்புக் கேட்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், தான் பேசிய விவகாரம் மறைக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் மறக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Exit mobile version