ரூ.405 கோடி சம்பள உயர்வு வேண்டாம்: அதிரடியாக மறுத்த சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தனக்கு வழங்கிய ரூ.405 கோடி சம்பள உயர்வை வேண்டாம் என மறுத்துள்ளார்.அதற்கு காரணமாக தன்னிடம் போதுமான அளவு பணம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக பொறுப்பேற்று கொண்டார் சுந்தர் பிச்சை.மிகவும் திறமையான தலைமை அதிகாரிகளுக்கு பொதுவாக அதிகம் சம்பளம் வழங்குவது இயல்பு தான்.ஆனால் சில நேரங்களில் அவர்களின் ஊதியம் பற்றி சர்ச்சை பேச்சுகளும் எட்டிப் பார்க்கும்.

2014 ஆம் ஆண்டில் ரூ.1,750 கோடி மதிப்புள்ள பங்குகளை அவர் பெற்றார். பின்பு 2015ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டும் அவருக்கான பங்குகள் வழங்கப்பட்டன.இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ’அல்பாபெட்’ 2017ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டிற்கான 58 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.405 கோடி மதிப்புள்ள பங்குகளை சுந்தர் பிச்சைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.அதனை சுந்தர் பிச்சை ஏற்காமல் மறுத்துவிட்டார்.அதற்கு காரணமாக தன்னிடம் போதுமான அளவில் பணம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கூகுள் நிறுவன கூட்டத்தில் ஒருவர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து விவாதித்தார் என சில செய்திகள் கூறுகிறது.தங்களை போன்ற நிர்வாகிகள் குறைந்த சம்பளத்தினை பெறும்போது, சி.இ.ஓ ஆன சுந்தர் பிச்சைக்கு அதிக சம்பளம் வழங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியதால், சுந்தர் பிச்சை தற்போது பங்கு ரீதியான சம்பள உயர்வை வாங்க மறுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version