நீதிமன்றத்திடமே தகவலை மறைத்த அரசு அதிகாரியை தூக்கி அடித்த ஐகோர்ட்

நீதிமன்றத்துக்கு முக்கிய தகவலை தெரிவிக்காமல் மறைத்ததாக வணிக வரித் துறை மாநில வரி அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யும்படி, வணிக வரித்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள் விழி கண்ணாடிகளுக்கு மாநில மற்றும் மத்திய ஜி எஸ் டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு அளிக்க கோரிய வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த கண்ணாடிகளை மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் விற்கும் போது விலக்கு வழங்கப்படுகிறதா என நீதிபதி, அரசுத்தரப்பு வழக்கறிஞரிடமும், காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த மாநில வரி அதிகாரி முகுந்தனிடமும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழகத்தில் மேற்கொள்ளும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், பிற மாநிலங்களுக்கு விற்கப்படும் போது வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கில் தீர்ப்பு வாசிக்கும் போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் கண்ணாடி வில்லைகள் விற்கும் போது அதற்கு விற்பனை வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த முக்கியமான தகவலை மறைத்ததாக, வரி அதிகாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வணிகவரித் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Exit mobile version