ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து வருவாய்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கருங்கல்பாளையம் காவிரிகரையில் வருவாய்துறை அதிகாரிகள் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில், கரையோரமாக உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version