வேதாரண்யம் அருகே 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம் அருகே கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, மணியன் தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதையடுத்து சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீனவர்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்த நிலையில், தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிவுறவுள்ளதால் தங்களது வலைகளை சரிசெய்யும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல்சீற்றம் தணிந்தவுடன் மீண்டும் கடலுக்கு செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version