புரட்சித்தலைவியால் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்களை மூட எத்தனிக்கும் விடியா திமுக!

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இ சேவை மையங்களை மூட விடியா திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடியா அரசின் செயலுக்கு எதிர்ப்பும், கண்டங்களும் எழுந்துள்ளன.

விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதிலேயே குறிக்கோளாக இருந்து வருகிறது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, விடியா திமுக அரசு முடக்கியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயன் பெற்று வந்த இ சேவை மையங்களையும் மூட, விடியா திமுக அரசு சதி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் இசேவை மையங்களை மூட விடியா அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏழை எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வாங்க பல நாட்கள் காத்துக்கிடக்கும் நிலை இருந்தது. இதனை மாற்றி மக்கள் பயன்பெறும் வகையில், இ சேவை மையம் என்ற ஒரு உன்னத திட்டத்தை புரட்சித்தலைவி ஜெயலலிதா, கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதன் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை எளிதில் பெற்று லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அத்துடன் கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், விதவைகள் நிதி உதவித் திட்டம், விதவை மறுமண நிதி உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் போன்ற சமூகநலத் துறை திட்டங்கள் சார்ந்த சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள இ சேவை மையங்களில், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இ சேவை மையங்களை மூட, விடியா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வாய் மொழி உத்தவை பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விடியா அரசின் செயலுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இ சேவை மையங்களை மூடுவதை உடனே கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை குறிவைத்து மூடுவிழா நடத்தி வரும் விடியா அரசு, மக்களை பாதிக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

Exit mobile version