அதிமுக ஆதரவாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுகவினர்

சென்னை திருவொற்றியூரில், திமுகவினரின் அராஜகத்தால், 60 குடும்பத்தினர் வசிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தெருக்களில் நடந்து செல்லும் திமுக அல்லாதவர்களை, அப்பகுதி இளைஞர்கள் வம்புக்கு இழுப்பது, பெண்களை கேலி செய்வது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டிக் கேட்பவர்களை, திமுகவினர் உதவியோடு அவர்கள் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அப்பகுதியைச் சேர்ந்த திமுக 5 வது வட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்கள் முன் நடந்து சென்றால், வயிறு எரிவதாக கூறி, அதிமுக ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், குப்பத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வசித்தால், கொலை செய்துவிடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அப்பகுதியில் இருந்து வெளியேறி, பழவேற்காடு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். சில நாட்கள் கழிந்த நிலையில், நேற்றிரவு வீடு திரும்பியவர்களை திமுகவினர் தாக்கியுள்ளனர்.

Exit mobile version