என்பிஆர் விவகாரத்தில் மக்கள் மத்தியில் திமுக அச்சத்தை ஏற்படுத்துகிறது: முதல்வர் பழனிசாமி

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது, தமிழகத்தில் என்பிஆர் குறித்து எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எந்த புதிய திட்டத்தையும்  அறிவிக்கவில்லை என்றும், கடந்த 11ம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துக்களை தான், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார். என்பிஆர் தொடர்பாக எந்த அறிவிக்கையும் வெளியிடவில்லை எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், என்பிஆர் விவகாரம் குறித்து விவாதிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்யாமல் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்பிஆர் விவகாரத்தில் மக்கள் மத்தியில் திமுக தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக ஆவேசமாக சாடினார். பதற்றத்தை தணிக்கவே வருவாய்த்துறை அமைச்சர் விளக்கம் அளித்ததாகவும், அனைத்து கட்சி தலைவர்களும் உணர்வுபூர்வமாக இந்த விவகாரத்தை சிந்திக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.

Exit mobile version