தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மட்டும் 4 ஆயிரத்து 542 சிறப்பு பேருந்துகள் நெல்லை, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளன. பிற மாவட்டங்களிலிருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதே போல தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10-ம் தேதி வரை சென்னைக்கு 4 ஆயிரத்து 207 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,635 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று முதல் 5-ம் தேதி வரை செயல்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் 26 மையங்கள், தாம்பரத்தில் 2 மையங்கள், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா ஒன்று என மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். 

Exit mobile version