ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நவ. 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐன்.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 1லட்ச ரூபாய் பிணைத் தொகை மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததால் ப.சிதம்பரம் வெளியில் வர முடியாமல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நவம்பர் மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version