“மாவீரன்” படப் பாணியில் செதில் செதிலாய் பெயரும் வீடுகள்! தரமற்ற வீடுகளைக் கட்டிக்கொடுத்த விடியா அரசு!

திண்டுக்கல் அருகே விடியா திமுக அரசு கட்டிக் கொடுத்த தரமற்ற வீடுகளால் உயிர்பயத்தில் வீதியில் படுத்துறங்கி வரும் இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டத்து கிராமத்தில், சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பில் இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கட்டப்பட்ட 320 வீடுகளும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் கட்டடங்கள் கட்டப்பட்டு 11 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் அடைந்து, சுவர்கள் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழைக் காலங்களில் மக்கள் உயிர்பயத்துடனே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் முறையாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் அவசர கதியில் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படாததால், மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் புகுந்து உயிர் பயத்தை ஏற்படுத்து வருகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் வீட்டை விட்டுவிட்டு அனைவரும் சாலையில் படுத்துறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் வாழ்வை காக்கிறோம் என்கிற பெயரில் அவர்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கி வருகிறது விடியா திமுக அரசு. ஓட்டு வங்கிக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, பிரச்சினைகள் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் விடியா அரசு அலட்சியமாக செயல்படுவதாக இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சேதமடைந்துள்ள குடியிருப்புகளை உடனடியாக சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version