கழுத்தில் கத்தியை வைத்து, கைகளில் வெட்டி, முந்திரி வியாபாரியை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி வியாபாரியை வெட்டிவிட்டு, 50 லட்ச ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டியை அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி வடிவேலுவும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வனும் தொழில் நண்பர்களாக இருந்தனர். தொழில் ரீதியாக பேச வேண்டுமென தான்வேலங்குப்பம் பகுதிக்கு வடிவேலை, கலைச்செல்வன் அழைத்துள்ளார். அங்கு சென்ற வடிவேலிடம் 3 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, முந்திரி தோப்பு பகுதியில் இறக்கிவிடுமாறு கலைச்செல்வன் கேட்டுள்ளார். அருகே சென்றவுடன் வடிவேல் கழுத்தில் கத்தியை வைத்து 2 கோடி ரூபாய் கேட்டுள்ளார்.

அதிர்ந்துபோன வடிவேல் கூச்சலிட்டதால், கையில் பலமாக வெட்டினார். 50 லட்ச ரூபாய் மட்டுமே வீட்டில் இருப்பதாகவும், அதனை கொடுப்பதாகவும் கூறி கெஞ்சினார் வடிவேல். இதையடுத்து குடும்பத்தினரிடம் பணத்தை எடுத்துவரச் சொல்லி, கொடுத்துவிட்டு உயிர் தப்பினார். காடாம்புலியூர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக வடிவேல் புகார் அளித்ததன்பேரில், போலீசார் கலைச்செல்வனை தேடி வருகின்றனர்.


 

Exit mobile version