சென்னையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது – ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் அதன் தாக்கம் படிப்படியாக குறைந்துவருவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் நடைபெற்றுவரும் நோய் தடுப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 791 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நாட்டிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவிகிதம் பூஜ்ஜியம் புள்ளி 7 சதவீதமாக இருப்பதாகவும் அவர் கூறினார். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், இதனால் இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version