சென்னையில் மதுபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

சென்னை அண்ணாசாலையில் மதுபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்டதைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவல்துறையினரிடம், சட்டக் கல்லூரி மாணவர்கள் ரகளை செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் அருகே நள்ளிரவு நேரத்தில், தனியார் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர்கள் 15க்கு மேற்பட்டோர் மதுபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த போக்குவரத்துக் காவலர் இளங்கோ உட்பட 2 பேர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு வந்த உதவி ஆணையர் செல்வக்குமார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மதுபோதையுடன் இரு சக்கர வாகன ரேசில் ஈடுபட்டதோடு காவலர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Exit mobile version