கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்!… ஒத்த செருப்பால் கூண்டோடு கைலாசம்!!

சென்னையில் அடுத்தடுத்து செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிஞ்சு கொள்ளையர்களை கட்டம் கட்டிய காவல்துறையினர், அவர்களை கூண்டோடு கைது செய்துள்ளனர். 

போலீசாருக்கே டிமிக்கி கொடுத்த பிஞ்சு பிஸ்கோத்துகள், ஒரேயொரு வெள்ளை நிற செருப்பால், கூண்டோடு சிக்கி சின்னாபின்னமாக சிதைந்து போயுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதாவிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 புள்ளீங்கோ பீஸ்கள், செயின் பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதேபோல், அண்ணாசாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளிலும், இந்த சிறுவண்டுகளின் சிக்கு புக்கு ரயில் விளையாட்டுகள் அரங்கேற, போலீஸாரும் கட்டம்கட்ட தொடங்கினர்.

செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த இடங்களில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், செயின் பறிப்பு மட்டும் இல்லாமல், செல்போன் பறிப்பு, பைக் திருட்டுகளிலும், இந்த மைனர்கள் குழு மங்காத்தா ஆடியதை கண்டு, கொஞ்சம் அதிர்ந்துதான் போய்விட்டனர். ஆனாலும், இந்த சிறுவண்டுகளில் ஒரு வண்டு மட்டும், வெள்ளை நிறத்தில் செருப்பு போட்டு திருடுவதை வழக்கமாக வைத்திருப்பதை, நோட் செய்த போலீஸார், அதையே ஸ்கெட்ச்சாக மாற்றினர்.

தனிப்படை போலீஸார் எதிர்பார்த்தப்படியே, குமரன் நகர் பகுதியில், பைக் திருடி மாட்டிக் கொண்டார், அந்த 17 வயது வெள்ளை செருப்பு வேதாளம். சிங்கிளாக மாட்டிக் கொண்ட சின்ன மைனரோ, அவரது கூட்டாளிகள் மூவரையும், முக்கனிச் சர்க்கரையாய் போலீஸாரிடம் கோர்த்துவிட, ஆட்டம் மொத்தமும் முடிவுக்கு வந்துள்ளது. செயின் பறிப்பதற்காக திருடப்படும் பைக்குகளை, காரியம் முடிந்ததும், அப்படியே இன்னொரு இடத்தில் விட்டுவிட்டு போய்விடுவது, பிஞ்சு பிஸ்கோத்துகளின் தாராள குணமாம்…

Exit mobile version