சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சஞ்சாரம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுக்கு தேர்வாகியுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றும், படைப்பு இலக்கியத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் என்றும் முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சஞ்சாரம் நூல் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள எஸ்.ராமகிருஷ்ணன், மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version