ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் நாளை சந்திப்பு

பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார்.

பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் தாக்கி வருகிறார். இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முனைப்பில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். பின்னர், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதேபோல், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அப்போது அவர் கூறியிருந்தார். அதன்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு நாளை சந்திக்கிறார்.

தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இந்த சந்திப்பு இருக்கும் எனவும், அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version