3,186 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம்: முதல்வர், ஆணை பிறப்பிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, 3 ஆயிரத்து 186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று ‘முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ அறிவிக்கப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தாண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் உள்ள 3 ஆயிரம் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில், முன்னணி தீயணைப்போர், ஓட்டுனர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள், இரண்டாம் நிலை வார்டர்களில் 60 பேருக்கும், முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

மேலும் காவல் வானொலிப் பிரிவு, நாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள், அலுவலர்கள் என மொத்தம் 6 பேருக்கு முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படவுள்ளது என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version