சீர்மிகு நகரங்களுக்காக தேசிய விருதுகள்; முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்

2019ம் ஆண்டிற்கான சீர்மிகு நகரங்களுக்காக பெறப்பட்ட 3 தேசிய விருதுகளையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில், 2019 ஆம் ஆண்டு சீர்மிகு நகரங்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ், திடக்கழிவு மேலாண்மையில் பரவலாக்கப்பட்ட நுண்ணுயிர் உரக்கூடம் அமைத்து சிறப்பாக செயல்படுத்தியதற்காக, வேலூர் மாநகராட்சிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இதே போல், நகர்புற சுற்றுச்சூழல் பிரிவின் கீழ், மாநகர பகுதியில் சூரிய மின்சக்தி நிலையம் நிறுவி, அந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி சாதனை படைத்தற்காக கோவை மாநகராட்சிக்கும், சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக ஈரோடு மாநகராட்சிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த 3 விருதுகளையும், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Exit mobile version