தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சரின் சென்னை அரசு இல்லம் மற்றும் கரூரிலுள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய துணை ராணுவ படையினர் அமைச்சரின் சென்னை அரசு இல்லத்தில் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் உட்பட உறவினர்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், இன்று சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக, தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. சென்னை மட்டுமல்லாமல், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

ஏற்கெனவே கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. பின்னர் அது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு போலீஸ் தரப்பில் ஒரு பக்கம் விசாரணை நடந்துவரும் வேளையில், செந்தில் பாலாஜி வீட்டிலும், அவரின் சகோதரர் வீட்டிலும் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். எதற்காக இந்தச் சோதனை என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் இன்னும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனை முடிவில் இது பற்றிய அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்காக வந்தனர் ஆனால் தலைமைச் செயலகத்தில் உள்ள காவல்துறையினர் அவர்களை சோதனை நடைபெறும் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை அதனால் தலைமைச் செயலக வளாகத்தில் துணை ராணுவ படையினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version