தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை எனவும் கூறி, வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தற்போது பதவியில் உள்ள எம்.பி.,-க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில், அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்துவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால், சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.

இதனைத் தடுக்க, காவலர்கள் நிலையில் நடவடிக்கை எடுக்கும் வகையில், விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version