ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்று பதிலளிக்க மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புக்காக தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% தமிழக ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு, நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்று மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version