சோற்றுக்காக அண்ணனை கொன்ற தம்பி! புதுச்சேரியில் பரபரப்பு!

சோறு என்ன பாடுபடுத்தும் தெரியுமா? கொலை கூடச் செய்ய வைக்கும்? நம்ப முடியவில்லையா… புதுச்சேரியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தைப் பாருங்கள்.

சோத்துக்காக நடந்த தகராறில் மதுபோதையில் தம்பியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் இவர். புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த 43 வயது ஜான்பியர் தான் தம்பி பிரான்ஸிசால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஜான்பியர் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டின் பின்புறம் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பிரான்சிஸ் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 23ஆம் தேதி மது அருந்தியபடி வீட்டில் இருந்த பிரான்சிஸுக்கும், அண்ணன் ஜான்பியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் அண்ணனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பலத்த காயம் அடைந்த ஜான்பியரை, பெற்றோர் புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். தகவலின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார், பிரான்சிஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜான்பியர் இறந்த நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, உப்பளம் துறைமுகம் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வரும் ஜான்பியர், தனது சம்பளப் பணத்தை தனது குடும்பத்துக்கு வைத்துக் கொள்வதோடு பெற்றோருக்கு செலவுக்கு தருவதில்லையாம். அதே நேரம், பெற்றோர் வீட்டில் வந்து தினமும் உணவு எடுத்துச் செல்வதால், ஆத்திரம் அடைந்த தம்பி பிரான்சிஸ் அண்ணன் ஜான்பியரைக் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் சோறு எடுக்க வந்த ஜான்பியரை, மதுபோதையில் இருந்த பிரான்சிஸ் கண்டித்தது தகராறாகவே கத்தியால் குத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிரான்சிஸை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

– புதுச்சேரி செய்தியாளர் சேரமனோகரன் மற்றும் ஆசாத்.

 

Exit mobile version