ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் படகு சவாரி துவங்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு ஏரி, பசுமை பூங்காவாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததை அடுத்து, புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட்டது.
89 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய 3கிமீ சுற்றளவிற்கு நடைபாதை, உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு மைதானம், என பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த ஏரி பசுமை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இப்படி பல்வேறு வசதிகளுடன் துவக்கி வைக்கப்பட இந்த பூங்காவில் படகு சவாரி மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து 50 லட்ச ரூபாய் மதிப்பில் படகு சவாரியை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.
சுற்றுலா செல்லும் பொழுது படகு சவாரி என்பது அலாதி இன்பத்தை கொடுக்கும். அந்த படகு சவாரி தங்கள் பகுதியிலேயே வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து படகு போக்குவரத்தை நிர்வகித்து வரும் மேலாளர் ராஜசேகர் கூறுகையில்,மேம்பட்ட திறன் கொண்ட மீனவர்களையே படகுகளை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று வயதிற்கு குறைவான குழந்தைகளை படகு போக்குவரத்திற்கு அனுமதிப்பதில்லை என்றும் 3 வயதிற்கு மேற்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் தான் இந்த படகு சவாரியை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் கூறுகின்றார் புதிதாக தொடங்கப்பட்டுள்ள படகு சவாரி அப்பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது. ஏரியை சிறப்பாக புனரமைத்து தந்த தமிழக அரசுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post