நின்று நிதானித்து பட்டப்பகலில் பைக் திருட்டு – மாஸ்க் அணிந்த இளைஞர் கைவரிசை!

புதுச்சேரி கடற்கரை சாலை அருகே செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர உணவகத்தில், விழுப்பும் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த அர்ஜுன்ராஜ் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் வேலைக்கு வந்தவர் உணவகத்தின் எதிரே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுவிட்டார். மாலையில் பணி முடிந்து வந்து பார்த்தபோது அவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது.
இதையடுத்து உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது தொப்பியும், மாஸ்க்கும் அணிந்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலிலேயே பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

வெகுதூரத்தில் இருந்து நடந்து வந்த அந்த மாஸ்க் இளைஞர், இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபோது அங்கிருந்த உணவக செக்யூரிட்டி ஏதோ கேட்பதற்கு அவர் பதில் சொல்வது, தொடர்ந்து வாகனத்தின் கண்ணாடியை துடைப்பது, பைக்கின் மீது அமர்ந்தபடி செல்போன் பேசுவது, உணவகத்தில் இருந்து எவரேனும் வெளியேறும்போது வாகனத்தை விட்டு தள்ளிச் சென்று செல்போன் பேசுவது, செல்ஃபி எடுப்பது என்று எந்த பதட்டமும் படாமல் நின்று, கவனித்து, நிதானமாக இருந்து கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது.இந்த சிசிடிவி காட்சிகளுடன், அர்ஜுன்ராஜ், பெரியகடை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பைக் திருடனை தேடி வருகின்றனர்.

குடியரசு தின விழாவினை முன்னிட்டு போலீசார் அதிக அளவில் இருக்கும் கடற்கரை சாலை பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றிருப்பது இருசக்கர வாகன உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version