வங்கதேச தேர்தலில் 4-வது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், 4-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராவது உறுதியாகியுள்ளது.

வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 298 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மாலையில் தொடங்கியது. இதில் தொடக்க முதலே முன்னிலை வகித்த பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன. வாக்கு எண்ணிக்கை முடிவில் அவாமி லீக் 287 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தில் 4-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராவது உறுதியாகியுள்ளது.

சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

இதனிடையே 221 தொகுதிகளில் மோசடி நடந்துள்ளதாக தேசியவாத கட்சி குற்றம் சாட்டி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் 6 லட்சம் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பையும் மீறி 8 மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

Exit mobile version