மாற்று வீரர் மூலம் ஆஷஸ் தொடரின் 2-வது போட்டியை டிரா செய்த ஆஸி. அணி

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக போட்டியின் நடுவே மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய வீரரின் உதவியுடன், ஆஸ்திரேலிய அணி 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சரின் துல்லியமான பவுன்சரில் தலையில் பந்து தாக்கி காயமடைந்தார். இதனால் 2-வது இன்னிங்ஸில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது. பொதுவாக களத்தில் இருக்கும் வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர் ஃபீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

இந்த நிலையில் காயமடையும் வீரரின் நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் புதிய விதியை அமல்படுத்தியது. அதன்படி, ஆட்டத்தின் நடுவே தலையில் பந்து தாக்கி காயமடைந்தவருக்கு பதிலாக முழுநேர மாற்று வீரரை ஒரு அணி தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் அவர் ஃபீல்டிங் மட்டுமல்லாது பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் தனது முழு பங்களிப்பை அளிக்க இயலும் என வகை செய்யப்பட்டது.

இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இந்த புதிய விதியின் அடிப்படையில் களமிறங்கிய முதல் முழுநேர மாற்று வீரர் எனும் சிறப்பை ஆஸ்திரேலிய அணியின் மார்ஸ் லாம்பஷே பெற்றார். இந்த மாற்றம்142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக களமிறங்கிய லாம்பஷே 59 ரன்கள் சேர்த்து ஆஸி. அணி 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

Exit mobile version