அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல் , கூட்டணி தர்மம் இல்லாமல் பேசிவருகிறார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீற்றம்!

அண்ணாமலை அதிமுக-வை பற்றி பேசுவது இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். சென்னை பட்டினபாக்கத்தில் அவருடைய இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

பாஜக தலைவர் அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல், கூட்டணி தர்மமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களை தவறாக பேசியது நாங்கள் கண்டிக்கிறோம். அண்ணாமலைக்கு ஒரு வரலாறும் தெரியாது,ஒரு பாரம்பரியம் தெரியாது. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.

பாஜகவும், அதிமுகவும் கூட்டணியாகவும், ஒற்றுமையாக இருந்தும், அண்ணாமலை பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தான் வருகிறார். பாஜக மற்றும் அதிமுக ஒன்று சேர்ந்து கூட்டணி தொடரக்கூடாது என்ற எண்ணம் தான் அவருக்கு உண்டு. தற்போது அவர் செய்யும் செயல்பாடுகள் அதை நோக்கி தான் செல்கிறது. இப்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வைத்தாலும் கூட நாங்கள் 30 தொகுதிகளை கைப்பற்ற முடியும்.

ஊழல் குறித்து அண்ணாமலை பேசலாம். ஆனால் அதை பேச தவறுகிறார் ஏன் என்று அவருக்கே தெரியும். மாநில தலைவருக்கு சிறிதளவும் தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதிமுக உடன் கூட்டணி இருக்கும்போது தான் பாஜக-விற்கு ஒரு அடையாளம் இருக்கும். இதுபோன்று தொடர்ந்து அண்ணாமலை எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பேசி வந்தால் கூட்டணி குறித்து மறு ஆலோசனை நடைபெறும்.

அண்ணாமலை ஒரு நடைமுறை தெரியாதவர். அவர் வாயை அடக்கிக் கொண்டு கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் அதுதான் எல்லோருக்கும் நல்லது இல்லை என்றால் எங்களுக்கு இழப்பு கிடையாது. அதிமுக-விற்கு ஒரு எல்லை உண்டு அது வரை நட்பு ரீதியாக செயல்படுவோம். தமிழக அரசாங்க சட்டமன்றத்தில் நான்கு வருடங்களுக்குப் பின் நான்கு சீட்டுகள் பாஜக சார்பில் நிற்பதற்கு காரணம் அதிமுக தான்.

கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு – எதை வேண்டுமானாலும் எடுத்தேன் கவுத்தேன் எதையும் செய்யக்கூடாது.நாங்கள் நட்புரீதியாக தான் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் அது போன்று செயல்படவில்லை. அண்ணாமலை அதிமுகவில் கூட்டணி இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு வருகிறார். ஆனால் தலைமையில் உள்ளவர்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அண்ணாமலை அதிமுக-வை பற்றி பேசுவது இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். அதிமுக ஒரு பெரிய ஆலமரம். பாஜக ஒரு சின்ன செடி. அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தான் முடிவு செய்ய வேண்டும். பாரத ஜனதா கட்சி, அதிமுக காட்சியுடன் கூட்டணியில் இருந்தால்தான் பலம் என அவர் கூறினார்.

Exit mobile version