தூக்கத்திற்கு தொந்தரவு அளித்ததால் ஆத்திரம்… பக்கத்து வீட்டுக் காரரை அடித்து கொன்ற பிரதர்ஸ்…!!

கடலூர் அருகே தூக்கத்திற்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இரவு நேரத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்த நபரை பக்கத்து வீட்டுக்காரர், இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கத்தை கெடுக்கும் வகையில் தொனதொனவென யாரெனும் பேசிக் கொண்டே இருந்தால் எரிச்சல் வருவது எல்லோருக்கும் இயல்பு. ஆனால் கடலூர் அருகே குடிகார சகோதர்கள் இருவர் தூக்கத்திற்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பேசி கொண்டிருந்த பக்கத்து வீட்டு காரரை இரும்பு கம்பியால் அடித்தே கொன்றுள்ளனர்.

கடலூர் மாவட்டம் கொளத்தகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமணம் ஆகாத தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்வது குறித்து தன் குடும்பத்து உறுப்பினர்களுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசியுள்ளார். இரவு 11 மணிக்கும் பிறகும் பேச்சும் சிரிப்புமாக உரையாடல் நீண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பக்கவீட்டு காரர்களான சுந்தர்ராஜனும் அவரது தம்பி ராமகிருஷ்ணனும் அங்கு வந்து
இரவு நேரத்தில் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… நாங்கள் யாரும் தூங்க வேண்டாமா….? என்று கேட்டு ராஜேந்திரனிடம் சண்டை வளர்த்துள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறியுள்ளது.

இதில் மது போதையில் இருந்த சகோதரர்கள் இருவரும் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ராஜேந்திரனை கண் முன் தெரியாமல் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிய குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து ராஜேந்திரன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர். வீட்டு வாசலில் அமர்ந்து சத்தமாக பேசியதற்காக ஒருவர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version