காற்றில் பறந்த மாணவர்களின் கல்வி கடன் ரத்து அறிவிப்பு – திமுகவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம்!

மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து, அதனை காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசின் முதல்வருக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் திமுக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக குறிப்பிட்ட அவர், பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், தலைப்பு 3ல் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவலக மொழி, தலைப்பு 6ல் ஈழத்தமிழர் நலன் தலைப்பில் பல வாக்குறுதிகள், தலைப்பு 7ல் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளில் தகுதி வாய்ந்த தமிழர்களை இந்திய தூதர்களாக நியமிக்க வலியுறுத்தல், தலைப்பு 8ல் கச்சத்தீவு பிரச்னை, தலைப்பு 16ல் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், தலைப்பு 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலை குறைப்பு என குறிப்பிட்டு எதையும் நிறைவேற்றவில்லை என சாடினார்.

மேலும், தலைப்பு 21ல் கேபிள் டிவி கட்டணக் குறைப்பு, தலைப்பு 23ல் வருமான வரி சலுகைகள், தலைப்பு 25ல் மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு, தலைப்பு 27ல் வேளாண்மை, தலைப்பு 46ல் நீட் தேர்வு ஒழிப்பு, தலைப்பு 47ல் கல்விக் கடன் தள்ளுபடி என எதையும் செய்யவில்லை. தலைப்பு 50ல் தனியார் துறையில் இட ஒதுக்கீடு, தலைப்பு 57ல் சாதி வாரி கணக்கெடுப்பு, தலைப்பு 75ல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க வரி நீக்கம், தலைப்பு 80ல் தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களில் இரவு சேவை என்று சுமார் 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமுறையாவது திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏதேனும் பேசினார்களா? அல்லது சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஆர்ப்பாட்டங்களிலாவது ஈடுபட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், 2019ல் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்ற விவரங்களை திமுக தலைவரும், விடியா அரசின் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட தயாரா? என சவால் விட்டுள்ளார்.

தமிழக மக்களின் கவனத்தை எளிதில் மறக்கடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன், அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது திமுகவின் பரம்பரை பழக்கம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது நிலம் இல்லாத அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கருணாநிதி அளித்த வாக்குறுதியைப் போலவே, அவரது வாரிசான ஸ்டாலின் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றார். 2019ல் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது என எதிர்க்கட்சித்தலைவர் குற்றம் சாட்டினார்.

2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 520க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது கூட்டாளிகளும், தமிழக மக்களை ஏமாற்றி விட்டதாக மனப்பால் குடித்து கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். கடந்த 28 மாத கால விடிய திமுக ஆட்சியில், பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள், உயர்நீதிமன்ற அறிவுரைக்கு பிறகும் சிறையில் உள்ள ஒருவர் இலாகா இல்லாத அமைச்சர், ஊழல் பணமான 30 ஆயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுதல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அனைத்து ஊடகங்களிலும் அணிவகுத்து வெளிவந்த போதும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் சிறிதும் நா கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் நேரத்தின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்று சுமார் 75 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பது விடியா திமுக அரசின் பித்தலாட்டத்திற்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி விமர்சித்துள்ளார்.

குறிப்பாக 159வது தேர்தல் வாக்குறுதியான, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்ப செலுத்த இயலாவிட்டால் 30 வயதுக்குட்பட்ட கல்விக்கடனை அரசே ஏற்று திரும்பி செலுத்தும் என விடியா அரசின் முதல்வர் கூறியதை எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். மாணவர்களின் கல்விக்கடனை திருப்பி செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா? விடியா திமுக அரசின் முதலமைச்சரே எனவும் எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடியா திமுக ஆட்சியை நம்பி, கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில், கல்விக்கடனை திருப்பி செலுத்தக்கோரி வங்கி அதிகாரிகள் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் வங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்று மிரட்டியதாக, கல்விக்கடன் வாங்கிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரோடு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு பகுதியில் ஒரு நாட்டுடமை வங்கியின் அதிகாரிகள் மிரட்டியது தெரியுமா முதலமைச்சரே? இது போன்று மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நடைபெற்றதாக செய்திகள் மூலம் தெரியவருவதாக குறிப்பிட்ட அவர், உண்மையே பேசாமல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் ஒருவர் முதலமைச்சராக செயல்படுவது நம் மக்களின் தலையெழுத்து என கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதை அறிந்திருந்தும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக்கடன் ரத்து செய்யாதது வரை மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது விடியா திமுக அரசு என எதிர்க்கட்சித்தலைவர் குற்றம்சாட்டினார்.

மேலும் 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார். 100 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக் கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் விடியா திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா? எனவும், சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? எனவும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version