அஇஅதிமுக என்கிற மாபெரும் கழகமும் தமிழ்மொழியும்..! (பகுதி மூன்று)

கடந்த இரண்டு பகுதிகளிலும் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோர் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கு செய்த சிறப்புகள் பற்றி பார்த்தோம். இந்தக் கட்டுரையில் கழகத்தின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழ் மொழிக்கு செய்த சிறப்புகள் பற்றி காண்போம்.

எடப்பாடி கே பழனிசாமி :

தமிழ்நாடு நாள் என்பதை நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாட வேண்டும் என்று அறிவித்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஆவார். மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு 1956 நவம்பர் 1 ல் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டது. ஆனால் ஆளும் விடியா திமுக தமிழ்நாடு நாளை ஜூலை 18 தான் கொண்டாட வேண்டும் என்று மாற்றியமைத்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ் வளர்ச்சித் துறைக்காக  சட்டசபையில் விதி எண் 100இன் கீழ் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அவர் கூறுகையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பாடுபட்டவர்களின் வாழ்வியலைப் பன்முக நோக்கில் ஆராய்ந்து, வளரும் தலைமுறையினரும் எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்பட்டது.

மேலும் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும் என்று சொல்லி அதையும் செய்து காட்டினார். இதற்கென ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது தமிழக அரசு. உலக நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தாய்மொழியையும், கலையையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், அங்குள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவர்கள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தக் காரணமாக அமைந்தார். இதன்படி 2020ம் ஆண்டில், உலக தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெற உள்ளது.

உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் தமிழ்மொழி தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, ‘சொற்குவை’ என்ற திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். சொன்னதைபோலவே, sorkuvai.com என்ற வலைதளத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டின்போது, இந்த சொற்குவை வலைதளம் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களை பதிவு செய்தல், சொற்களின் தொடராக்கப் பரிமாணங்களைப் பதிவு செய்தல், சொற்களுக்கான பொருள் விளக்கத்தைத் தேடும் வசதியை அமைத்துக் கொடுத்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொல்லே மீளவும் வராமல் தடுத்தல் மற்றும் புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு, அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலா்களும், மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (M.A.) பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தெரிவின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக தலா 2,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும்,இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பாக அன்றைக்கு வெளியிட்டு செயல்படுத்தினார்.

முற்றும்..

பகுதி ஒன்று – https://newsj.tv/aiadmk-and-tamil-language-part-1/

பகுதி இரண்டு – https://newsj.tv/aiadmk-and-tamil-language-part-2/

Exit mobile version