சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் – அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் அரசு தலைமை வழக்கறிஞர் ஆலோசனை

“சர்கார்” படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்திருக்கும் விஜய், படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்த நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் அமைச்சர் சிவி சண்முகத்துடன் நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “சர்கார்” படத்தில் இலவச பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட காட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி செய்யும் நக்சல் தீவிரவாதிகள் போல், விஜய் செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய் மற்றும் படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலைமை செயலகத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து “சர்கார்” பட விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version