திமுகவை எதிர்த்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – பொதுச்செயலாளர் அறிக்கை!

கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

சேலம் புறநகர் மாவட்டம், ஆத்தூர் மற்றூம் நரசிங்கபுரம் நகராட்சிகளில் அடிப்படை பணிகளை செய்யாமலும்; கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பிலும் போட்டு வைத்துள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து, சேலம் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் க்ண்டன ஆர்ப்பாட்டம்!
7.9.2023 – வியாழக் கிழமை

 

சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சிக்கு அடுத்த படியாக மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் ஆத்தூர் நகராட்சி பெரிய நகராட்சியாகும். அதனையொட்டி அமைந்துள்ளது நரசிங்கபுரம் நகராட்சி. இவ்விரு நகராட்சிகளிலும் நிலவி வந்த குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மாபேட்டை நீரேற்று நிலையம் முதல் மேட்டுப்பட்டி நீரேற்று நிலையம் வரை உள்ள பழுதடைந்த குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழாய்களை அமைத்து, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டது.

நகரின் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு, தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டன. தேவையான தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள் சுத்தமாக காட்சியளித்தன; சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன; நகரின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.

குறிப்பாக, வசிஷ்ட நதியை சுத்திகரிக்கும் பொருட்டு, சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் எல்லையில், ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவுநீர் பகுதிகளை ஒருங்கிணைத்து, கழிவுநீர் கால்வாய் மூலம் சாக்கடை கழிவுநீரை ஆத்தூர் நகரின் எல்லைக்குக் கொண்டு சென்று மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு வண்ணாந்துறை அமைத்து, சலவைத் தொழிலாளர்காளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், மிக அற்புதமான திட்டத்தைத் தயார் செய்து அதனை செயல்படுத்த அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆத்தூர் நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஆத்தூர் நகரின் தெற்குப் பகுதியில் ராசிபுரம் செல்லும் சாலையையும், பெரம்பலூர் சலையையும் இணைக்கும் வகையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் உள்வட்டச் சாலை அமைத்திட 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு, பூர்வாங்க பணிகளைத் தொடங்கிட எனது தலைமையிலான கழக அரசால் ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், படிப்படியாக நிலைமை மாறி எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்யாததால், மக்கள் குடிநீர் இன்றியும், மோசமான சாலைகளும், தெருவிளக்குகள் எரியாமலும், போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாமல் தேங்கும் குப்பைகளாலும், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் :

* சுமார் 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும்      முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதுவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.

* குறைவான தூய்மைப் பணியாளர்களால், தூய்மைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

* ஆத்தூர் நகரில் மிக முக்கிய பிரதான சாலைகளான, காந்தி நகர் 60 அடி சாலை மற்றும் ரயிலடி சாலை ஆகிய இரண்டு சாலைகளிலும் குடிநீர் குழாய் அமைப்பதாகக் கூறி, சாலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மண் சாலைகளாக, மேடு பள்ளங்களாக உள்ளதால், அங்குள்ள வியாபாரிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள், அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். தரமற்ற, பழுதான சாலைகளால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

* நரசிங்கபுரம் நகராட்சிக்கு தனியாக கட்டடம் கட்டுவதற்கு அம்மா ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 28 மாதங்களுக்குப் பிறகும் இன்னும் நிதி ஒதுக்கி, நகராட்சிக்கு தனியாக அலுவலகக் கட்டடம் கட்டப்படவில்லை.

* தெரு விளக்குகள் எப்போதும் எரிவதில்லை. புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை.

* தற்போது, ஆத்தூர் நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக, விழுப்புரம் நகராட்சி ஆணையரை விடியா திமுக அரசு நியமித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல நகராட்சிகல் இருந்தும், 2 மாவட்டங்கள் கடந்து தொலைவில் உள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையரை நியமித்துள்ளது. மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். இதனால், ஆத்தூர் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் பார்ப்பது என்பது எளிதான காரியமன்று.

* அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட எனது ஆட்சியில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசிஷ்ட நதியை சுத்தப்படுத்தும் அற்புதமான திட்டத்தை, இந்த விடியா திமுக அரசு கடந்த 28 மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளது.

* ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீடில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, ஆத்தூர் மருத்துவமனயில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.

* ஆத்தூர் புதுப்பேட்டை – பெரம்பலூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 10 கோடி ரூபாய் அம்மாவின் அரசில் ஒதுக்கப்பட்டது. விடியா திமுக ஆட்சியில் 28 மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் ஒப்பந்தமே கோரப்படவில்லை.

* ஆத்தூர் கடைவீதியில் உள்ள சாலையோர கடைகளை ஒழுங்குப்படுஹ்தும் வகையில், அம்மாவின் அரசில், கடைகளை வைத்திருந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர். தற்போது சாலையோர வியாபாரிகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோலவே, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பழக் கடைகள் மற்றும் பூ கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளுக்கு புதிய கட்டடம் கட்டி வியாபாரம் செய்ய அம்மாவின் அரசில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளை, உண்மையாக பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கே வழங்க வேண்டும்.

ஆத்தூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லை; பொறியாளர் இல்லை; பணி மேற்பார்வையாளர் இல்லை; நகர அமைப்பு அலுவலர் இல்லை; பணி ஆய்வாளர் இல்லை; வருவாய் ஆய்வாளர் இல்லை. இதன் காரணமாக, அனைத்து முக்கிய பணியிடங்களும் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு கே.என். நேரு அவர்கள். ஆனால், தமிழ் நாட்டிலேயே முக்கிய அதிகாரிகள் இல்லாமல் தடுமாறும் நகராட்சி ஆத்தூர். ஆத்தூர் நகர மக்கள் தங்கள் குறைகளை எங்கே சென்று சொல்லுவது என்பதுகூட புரியாமல் உள்ளனர்.

இதே போன்று, தமிகத்தில் உள்ள மற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தரமற்ற பழுதான சாலைகள், பழுதமடைந்த மின் விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, போதுமான எண்ணிக்கையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலை ஆகியவற்றை இந்த விடியா திமுக அரசு விரைவில் நிவர்த்தி செய்யாதபட்சத்தில், அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் அவல நிலைமைக்குக் காரணமாக விடியா திமுக அரசையும்; நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களையும்; நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களையும் கண்டித்தும்; நகராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 7.9.2023 – வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏ அவர்கள் தலைமையிலும், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version