இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக வேட்பாளர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் நாராயணன் 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதேபோல விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வன் 44 ஆயிரத்து 924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருடன் அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடனிருந்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன், மக்கள்நலத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு நல்ல முறையில் செயல்படுத்தி வருவதால் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ததாகத் தெரிவித்தார்.

Exit mobile version