பச்சை மற்றும் காவி நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்தார்

பச்சை மற்றும் காவி நிற பட்டாடை, செண்பகப் பூ மலர் மாலைகளுடன் காட்சி அளித்து வரும் அத்திவரதரை, லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 33-ஆம் நாளான இன்று, பச்சை மற்றும் காவி நிற பட்டாடை உடுத்தி, செண்பகப் பூ மலர் மாலைகளுடன் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள், அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 32 நாட்களில் மட்டும் சுமார் 46 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். சயன கோலத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தவர்களும், நின்ற கோலத்திலும் தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய வசதியாக, வரிசை எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆடிப்பூரத்தை ஒட்டி நாளை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்படுகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் முடிவடைந்த பிறகு, இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version