மாற்றுத் திறனாளிக்கு தனது 2 வருட சேமிப்பைக் கொடுத்த இளைஞர்

மாற்றுத் திறனாளி ஒருவருக்கு, தன் இரண்டு வருட சேமிப்புப் பணத்தைக் கொடுத்த கடலூர் இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் சசிக்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சென்னை நுங்கம்பாக்கம் அருகே சசிக்குமார் சென்றபோது, அங்கு மாற்றுத் திறனாளி ஒருவர் மூன்று சக்கர மிதிவண்டியில் கைக்குட்டை உள்ளிட்ட பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்.

மிக இயலாத நிலையில், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வியாபாரம் செய்த மாற்றுத் திறனாளியின் முயற்சி சசிக்குமாரின் கவனத்தைக் கவர்ந்தது. இதையடுத்து, அந்த மாற்றுத் திறனாளியிடம் பேச்சுக் கொடுத்து, அவரை வாழ்த்திய சசிக்குமார், இரண்டு வருடங்களாக தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த சேமிப்புத் தொகையையும் அவருக்கு வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

Exit mobile version