புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருபவர் ரமேஷ்குமார். 

இந்நிலையில் அதே பகுதியில் வசித்த கீதா என்பவர் ரமேஷ்குமாரின் இணைப்பில் இருந்து தண்ணீர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் குமார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத துணை ஆய்வாளர் விஜயபாண்டியன், விசாரணை என்ற பெயரில் ரமேஷ்குமார் மற்றும் அவரின் மகனை அரை நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் அமரவைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரமேஷ்குமார், துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், மனித உரிமைகள் மீறப்படுமானால் அதற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் மனுதாரருக்கு இழப்பீடாக துணை ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதமாக விதித்து, அதை பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.

Exit mobile version