சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே வியாபாரி மீது போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், வியாபாரி உயிரிழந்தது , சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி முருகேசன், வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடை நடத்தி வந்தார்.
முருகேசன் தனது நண்பர்களான சிவன்பாபு, சங்கர் ஆகியோருடன் மது அருந்திவிட்டு, பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூவரையும் வழிமறித்த போலீஸார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் செய்த வியாபாரி முருகேசனை, போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதில், சுய நினைவை இழந்த வியாபாரி முருகேசன், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது உயிரிழந்தார்.
தந்தையை இழந்து அனாதையாக நிற்பதாக முருகேசனின் 3 குழந்தைகளும் கண்ணீர் மல்க அழுது தீர்த்தனர்.
தந்தையை அடித்துக்கொன்ற போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில், தாக்குதல் நடத்திய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கொலை வழக்கு உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட நடவடிக்கையாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post