டிட்லி புயல் தாக்கத்தினால் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !

ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புயலானது அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்த நிலையில் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இப்புயலானது ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் கடுமையாக தாக்கியது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதாகவும், சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version