கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி : 4 பேர் பலி

சென்னை திருமுல்லைவாயலில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயில் சிவசக்தி நகரில் வசிக்கும் ஒப்பந்ததாரர் கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து 80 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமியின் மருமகன் ஆறுமுகம் வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த 7 பேரில் 4 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது மனைவி கல்யாணி உட்பட இரு மகள்களையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடனை திருப்பித் தர முடியாததால், கோவிந்தசாமி, அவரது மனைவி சுப்பம்மாள், மகன்கள் நாகராஜ், ரவி, மகள் கல்யாணி மற்றும் 2 பேத்திகள் என அனைவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதில் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் உயிரிழந்ததும் தெரியவந்தது. தற்கொலை சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version