ஆறாம் வகுப்பு மாணவி சாதனை! தேங்காய்களின் மீது அமர்ந்து அரைமணி நேரம் பத்மாசனம்!

தேங்காய்களின் மீது அரைமணி நேரம் அமர்ந்து பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தேங்காயின் மீது அரைமணி நேரம் அமர்ந்து பத்மாசனம் செய்து ORANGE WORLD RECORDS எனும் உலக சாதனைப் பதிவு அமைப்பின் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் இந்த மாணவி. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மகள் ரித்திஷா. பதினோறு வயதான இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே யோகாவில் ஆர்வம் கொண்ட ரித்திஷா இதற்காக தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். யோகாசனத்தில் குழுவாக பல சாதனைகளை செய்துள்ள ரித்திஷா, தனி ஆளாக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் 3 தேங்காய்களின் மீது அமர்ந்து அரை மணி நேரம் பத்மாசனம் செய்து அசத்தினார். மாணவியின் உலக சாதனை முயற்சியின்போது பள்ளியில் உள்ள சக மாணவிகள் அவரை உற்சாகப்படுத்தினர்.

ரித்திஷாவின் இந்த சாதனையை ORANGE WORLD RECORDS அமைப்பு அங்கீகரித்துள்ளது. அடுத்ததாக ஆணி பலகையின் மீது அமர்ந்து சாதனை புரிய உள்ளதாக ரித்திஷா தெரிவித்தார்.

Exit mobile version