இராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி பணி நியமன ஆணையில் முறைகேடு செய்த 5 பேரை, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், இளநிலை உதவியாளர் பணியில் சேர இராஜேஷ் என்பவர் போலி நியமன ஆணை வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் என்பவர், பணத்தை பெற்றுக்கொண்டு, 2017-18 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான 4 ஆணைகளில் பெயர் திருத்தம் செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இராஜேஷ், கலைவாணன், சதீஷ் குமார், கண்ணன், கேசவன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மனோஜ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.